Saturday, January 17, 2009

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?

27-03-1977
(கடற்கரை கவியரங்கில் முதல்பரிசு பெற்ற கவிதை)

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?

கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?
கண்கள் துடிப்பதுதெரிகிறதா?- அது
காணத் துடிப்பது புரிகிறதா?

மண்ணின் நல்ல மலர்ச்சியினை
மனதில் கொள்ளத் துடிக்கிறதா?

*******
அன்பாய் அன்னை அருகமர்ந்து
அருசுவை உண்டி படைக்கயிலே
இன்னும் கொஞ்சம் உண்ணப்பா
என்றே அவளும் சொல்லையிலே

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

*****
என்னை நாடி வந்தவளும்
எனக்கே சொந்தம் ஆனவளும்
என்னை அன்பால் கழுவிடுவாள்
எச்சில் சோற்றை விழுங்கிடுவாள்

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

**********
சின்னப் பையன் இழுக்கையிலே
சிறுகை கொண்டு அணைக்கையிலே
மின்னும் கண்ணால் பேசையிலே
மிளிரும் மழலை ஒலிக்கையிலே

அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

*****

கண்கள் எனக்கோ இலையென்று
கண்ணன் அவனும் அறியாமல்
கண்கள் பொத்தி ஆடிடுவான்!
கண்ணா மூச்சி காட்டிடுவான்

சின்னப் பையன் அவனாட்டம்
சேர்ந்து நானும் ஆடிடவே
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?

********

இமைகள் அசைந்து பார்க்கிறதே—அதன்
இயக்கம் தோல்வி ஆயிடுதே!
சுமைகள் குறைய வழியிலையோ?—இச்
சொர்க்கம் காண வழியிலையோ?


இறைஞ்சிக் கேட்பது புரியலையா?
இரந்து கேட்பதும் புரியலையா?
இறவா உனக்கும் கண்ணிலையா?
இரக்கம் என்பதும் அங்கில்லையா?


**********

1 comment:

Revarhy said...

adhi arputhamaana kavithai;
puthumaiyaana karuththu;
enna oru yekkam!
kavikku melum sirappu kitta vendum;
muyarchigal melum merkolga!