மரத்தினைச் சுமக்க வைத்தார்
மன்பதை சுமக்கும் உன்னை!
சிரத்தினில் முள்ளை வைத்தார்
தெருவினில் இழுத்து வந்தார்
மரத்தினில் அடித்துக் கொன்றார்
மறுபடிப் பிறந்து வந்தீர்!
மக்களிவர் புதைத்து வைத்த
உண்மைக்கும் பிறப்பு(இறப்பு) உண்டோ?
27-03-1977
(கடற்கரை கவியரங்கில் முதல்பரிசு பெற்ற கவிதை)
கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?
கண்ணின் ஏக்கம் தெரிகிறதா?
கண்கள் துடிப்பதுதெரிகிறதா?- அது
காணத் துடிப்பது புரிகிறதா?
மண்ணின் நல்ல மலர்ச்சியினை
மனதில் கொள்ளத் துடிக்கிறதா?
*******
அன்பாய் அன்னை அருகமர்ந்து
அருசுவை உண்டி படைக்கயிலே
இன்னும் கொஞ்சம் உண்ணப்பா
என்றே அவளும் சொல்லையிலே
அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?
*****
என்னை நாடி வந்தவளும்
எனக்கே சொந்தம் ஆனவளும்
என்னை அன்பால் கழுவிடுவாள்
எச்சில் சோற்றை விழுங்கிடுவாள்
அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?
**********
சின்னப் பையன் இழுக்கையிலே
சிறுகை கொண்டு அணைக்கையிலே
மின்னும் கண்ணால் பேசையிலே
மிளிரும் மழலை ஒலிக்கையிலே
அன்பு கொஞ்சும் அவள் முகத்தை
அற்பன் நானும் கண்டிடவே!
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?
*****
கண்கள் எனக்கோ இலையென்று
கண்ணன் அவனும் அறியாமல்
கண்கள் பொத்தி ஆடிடுவான்!
கண்ணா மூச்சி காட்டிடுவான்
சின்னப் பையன் அவனாட்டம்
சேர்ந்து நானும் ஆடிடவே
கண்கள் துடிப்பது தெரிகிறதா?
அது காணத் துடிப்பது தெரிகிறதா?
********
இமைகள் அசைந்து பார்க்கிறதே—அதன்
இயக்கம் தோல்வி ஆயிடுதே!
சுமைகள் குறைய வழியிலையோ?—இச்
சொர்க்கம் காண வழியிலையோ?
இறைஞ்சிக் கேட்பது புரியலையா?
இரந்து கேட்பதும் புரியலையா?
இறவா உனக்கும் கண்ணிலையா?
இரக்கம் என்பதும் அங்கில்லையா?
**********