Thursday, December 15, 2011









சிந்தனை உலகை விரிக்கிறதே!!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!

விந்தை உலகம் இதுதானே!

வேடிக்கை காட்டுது பார்த்தாயா?

####

சிலந்தி வலையை விரிப்பதுவும்-அதில்

சிறுபுழு பூச்சி விழுவதுவும்

உலக நியதி தானென்று

உணர்ந்து கொள்ளும் போதினிலே

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!

####

குயவன் சக்கரம் சுழல்வதுவும்- அதில்

குவலயச் சுழற்சி தெரிவதுவும்

துயரச் சக்கரம் சுழல்வதுவும்

தொடரும் இன்பம் தெரிவதுவும்

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!


#####

மலர்த்தேன் வண்டு சேகரிக்க-

மனிதன் உண்ண அபகரிக்கப்

புலப்படும் உண்மை இதுவென்று

புரிந்து கொள்ளும் போதினிலே!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!


####


மீனவன் வலையை வீசிடவும்-அதில்

மீன்கள் வலிந்து விழுவதுவும்

தினமும் நிகழும் கதையென்று

தெரிந்து கொள்ளும் போதினிலே!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!!

######


பறவை புழுவைத் தின்பதுவும்-அப்

பறவை மனிதனுக் காவதுவும்,

திறமை அல்ல என்றேநாம்

தெரிந்து கொள்ளும் போதினிலே!!

சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!


#######

ஒன்றை ஒன்று கொல்வதுவும்

ஒன்றில் ஒன்று வாழ்வதுவும்

மண்ணில் என்றும் உள்ளதென

மனிதன் உணரும் போதினிலே

சிந்தனை உலகை விரிக்கிறதே!!-அதில்

சிக்கல் யாவும் தீர்கிறதே!!!

########








No comments: