
சிந்தனை உலகை விரிக்கிறதே!!!
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!
விந்தை உலகம் இதுதானே!
வேடிக்கை காட்டுது பார்த்தாயா?
####
சிலந்தி வலையை விரிப்பதுவும்-அதில்
சிறுபுழு பூச்சி விழுவதுவும்
உலக நியதி தானென்று
உணர்ந்து கொள்ளும் போதினிலே
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!!
####
குயவன் சக்கரம் சுழல்வதுவும்- அதில்
குவலயச் சுழற்சி தெரிவதுவும்
துயரச் சக்கரம் சுழல்வதுவும்
தொடரும் இன்பம் தெரிவதுவும்
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!
#####
மலர்த்தேன் வண்டு சேகரிக்க-
மனிதன் உண்ண அபகரிக்கப்
புலப்படும் உண்மை இதுவென்று
புரிந்து கொள்ளும் போதினிலே!
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!
####
மீனவன் வலையை வீசிடவும்-அதில்
மீன்கள் வலிந்து விழுவதுவும்
தினமும் நிகழும் கதையென்று
தெரிந்து கொள்ளும் போதினிலே!!
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!!!
######
பறவை புழுவைத் தின்பதுவும்-அப்
பறவை மனிதனுக் காவதுவும்,
திறமை அல்ல என்றேநாம்
தெரிந்து கொள்ளும் போதினிலே!!
சிந்தனை உலகை விரிக்கிறதே!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!!
#######
ஒன்றை ஒன்று கொல்வதுவும்
ஒன்றில் ஒன்று வாழ்வதுவும்
மண்ணில் என்றும் உள்ளதென
மனிதன் உணரும் போதினிலே
சிந்தனை உலகை விரிக்கிறதே!!-அதில்
சிக்கல் யாவும் தீர்கிறதே!!!
########
No comments:
Post a Comment